ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானமொன்று தென்சூடானில் விபத்திற்கு உள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்சூடதனில் அமைந்துள்ள ஜுபா விமானநிலையத்தில் என்டனோவ் – 12 என்ற குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தென்சூடான் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட தென்சூடானைசை் சேர்ந்த 15 பேர் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் விமானத்தில் இருந்தவர்களில் 17 பேர் உயிரிழந்ததோடு, இருவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள தென்சூடான் ஜனாதிபதியின் பேச்சாளர் எனினும் இதனை உறுதிப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் விமானத்தின் ஒரு இயந்திரம் பழுதடைந்திருந்ததை அவதானித்தமைக்கான சாட்சி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.