விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது சட்ட விரோதமானதாகும் எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ, வீட்டை மூடிக் கொண்டு ‘பிரபாகரனின்” புகைப்படத்தை வைத்து மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை கண்டு பிடிப்பது கஷ்டமாகும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் மாவீரர் தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
இலங்கையில் அரசியலமைப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அத்தகைய செயற்பாடு சட்ட விரோதமானது தேசத் துரோகமானது. இதற்கு இடமளிக்க மாட்டோம். அத்தோடு விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது.
ஆனால் வீட்டை மூடிக் கொண்டு பிரபாகரனின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அனுஷ்டித்தால் அதனைக் கண்டுபிடிப்பது கடினமானதாகும்.ஆனால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறதா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனமாக செயற்படுகிறது.
சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கடும் போக்குவாதத்தைக் கடைப்பிடித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமாதானமாக வாழவும் தீர்வுக்கும் தயாராவே இருக்கின்றார் என்றும் அமைச்சர் விஜேதாஸ தெரிவித்தார்.