திருகோணமலை திரியாய பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்குறிய பகுதிக்குள் நுழைந்தமை மற்றும் அனுமதியின்றி புதையல் தோண்டிய நால்வருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் விதித்து திருகோணமலை நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு தண்டப் பணத்தொகையினை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூட் ரவி பெர்னாந்து வயது(34), வி.டி.விஜயசிறி வயது(28), எம்.ஏ.வசீர் வயது(43), சுனில் பிரியந்த வயது(42), ஆகியோருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி திருகோணமலை திரியாய பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் பதினொரு பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு குச்சவெளி பொலிஸாரால் சந்தேக நபர்களுக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் பதினொரு பேரையும் குற்றவாளியாக இணங்கண்டு ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை விதித்தும் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே உத்தரவிட்டார்.
இதில் ஏழு பேர் குறித்த தண்டப் பணத்தினை செலுத்தி விடுதலையான நிலையில் மிகுதி நால்வர் தண்டப் பணத்தினை செலுத்தாததால் ஆறு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.