வவுனியா விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி வித்தியாயலத்தின் அதிபர் திரு.செல்வதேவன் தலைமையில் நேற்று (05.02.2015) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் தியாகராசா, வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் திரு.சிறீஸ்கந்தராசா, நெடுங்கேணி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.கிருபானந்தன், வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.இராஜேஸ்வரன், அருட்பணி அன்புராசா அடிகளார், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த பாடசாலையில் வகுப்பறை கட்டட வசதிகள், ஆசிரியர்களுக்கான விடுதி வசதிகள் உட்பட கல்விக்கு பெரும் தடையாக போக்குவரத்து வசதி இன்மை, பாதைகள் புனரமைப்பு இன்றி காணப்படுகின்றமை, மின்சாரம் வழங்கப்படாமை, காட்டு யானைகளின் அத்துமீறல் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்திசெய்து மாணவர்களின் சுமுகமான கல்வி நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்தி தருமாறும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை சமுகத்தினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப்பாடசாலையில் கல்விகற்றுவரும் போரினால் தாய் அல்லது தந்தையை இழந்த 15 மாணவர்களுக்குரிய பாதணிகளை அருட்பணி அன்புராசா அடிகளார் அதிபர் திரு.செல்வதேவன் அவர்களிடம் கையளித்தார்.