நாகபாம்பை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த இளைஞர்!!

296

news_08-04-2015_5snake

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நாகப்பாம்பொன்றை திருமணம் செய்துகொள்வதற்கு முயற்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தீப் பட்டேல் எனும் இந்த இளைஞர், சில வருடங்களுக்கு முன் பாரிச வாதத்துக்குள்ளானவர். இதனால், பாம்பு போன்று ஊர்ந்து செல்லும் இவர், தன்னை மனித உருவிலுள்ள பாம்பு எனக் கூறிக்கொள்கிறார்.

இவர் நாகப்பாம்பொன்றை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். அழகிய பெண்ணாக இருந்து பாம்பாக மறுபிறப்பெடுத்துள்ள ஒருவரை தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இவர் கூறினார். அதையடுத்து, 12,000 இற்கும் அதிகமான மக்கள் இத்திருமணத்தை காண்பதற்கு சந்தீப் பட்டேலின் ராஜ்பூர் கிராமத்தில் திரண்டனர். வாரணாசி மாவட்டத்திலிருந்து மாத்திரமல்லாமல், அருகிலுள்ள அலஹாபாத், சோனேபத்ரா, அஸாம் கார்த் போன்ற மாவட்டங்களி லிருந்தும் மக்கள் அங்கு சென்றனர்.

அருகிலுள்ள மலையொன்றில் வசிப்பதாக கூறப்பட்ட மணமகளான பாம்பு திருமண வைபவத்துக்காக வரும் என நம்பிய மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் அப்பாம்பு அங்கு வரவில்லை. இம்மக்கள் கூட்டத்தை உள்ளூர் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பல்வேறு பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். மக்களை கலைந்துசெல்லுமாறு பொலிஸார் கோரியபோதும் திரண்டிருந்த மக்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டது. பாம்புக்கும் சந்தீப் பட்டேலுக்கும் திருமணம் நடத்திவைக்கவிருந்த மதகுரு பொலிஸாரைக் கண்டவுடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் சந்தீப் பட்டேலையும் அவரின் தந்தையான தயாசங்கர் பட்டேலையும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்தனர்.
இவர் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியாது. இவர் மனித உருவிலுள்ள பாம்பு என சிலர் வதந்தி பரப்புகின்றனர். இந்த நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தீப் பாம்பு போன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்