மக்கள் எதிர்ப்பு காட்டியிருந்தால் என் கணவர் உயிர்தப்பியிருப்பார் : கௌசல்யா உருக்கம்!!

276

Kowsalya

எங்கள் மீதான தாக்குதலை ஒருவேளை மக்கள் குறைந்தபட்சம் ஒரு கல்லை எடுத்து வீசி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கூட என் கணவர் காப்பாற்றப்பட்டிருப்பார் என உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்டட சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார்.

உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் சங்கர் கொல்லப்பட்டார். அவரது மனைவி கௌசல்யா படுகாயம் அடைந்தார். 15 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு நேற்று தன் கணவர் சங்கர் வீட்டுக்குத் திரும்பினார்.

சாதி மாறி காதலித்து திருமணம் செய்ததால் தன் கணவரை கொன்றுவிட்டதாக தன் பெற்றோர், உறவினர்கள் மீது புகார் கூறி அவர்கள் கைதாக காரணமான கெளசல்யா அதோடு குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி, தன் பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.

கணவரைக் கொன்ற பெற்றோர் உறவினர்கள் மீதான கெளசல்யாவின் கோபம் இப்போது சங்கரின் கொலையை வேடிக்கை பார்த்த மக்கள் மீது திரும்பியுள்ளது.

எங்க அப்பா, அம்மா இந்த மாதிரி யோசிப்பாங்கனு நான் நினைச்சு கூட பாக்கலை. ஆனா அதை விட என் வருத்தம் இந்த சம்பவத்தை தடுக்காம வேடிக்கை பார்த்த மக்கள் மீதுதான்.

ரோட்டில் யாரோயோ அடிக்கறாங்கனு வேடிக்கை பார்க்கமா யாரோ ஒருத்தர், அவங்க மேல கல் எடுத்து வீசியிருந்தாலும் கூட அவரை காப்பாத்தியிருக்கலாம்.

அதிர்ச்சியோட வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் பக்கத்துல கூட வரலை. யாராவது எதிர்த்து ஒரு கல்லை எடுத்து அவங்க மீது வீசியிருந்தால் கூட எதிர்ப்பை பார்த்து அவனுங்க பயந்து ஓடியிருப்பாங்க.

பொதுமக்கள் அவனை காப்பாத்த கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம், என்று கண்ணீர் விட்டவர், கண்ணீரை துடைத்தபடி மீண்டும் பேசினார்.

அவங்க வருவாங்க. எங்க கூட வரச்சொல்லி கேட்பாங்க. அப்புறம் போயிருவாங்கனு தான் எதிர்பார்த்தோம். ஆனா கொலை செய்ற அளவுக்கு போவாங்கனு நினைச்சு கூடப் பார்க்கலை.

நான் இங்கேயே தான் இருக்கப் போறேன். என் கணவர் இடத்தில் இருந்து நான் இந்த குடும்பத்தை பார்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

அரசு ஏதாவது வேலை கொடுத்தால், இந்த குடும்பத்தை நான் பராமரிக்க வசதியாக இருக்கும். வேலைக்கு போயிட்டே படிக்கலாம்னு இருக்கேன், என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

கெளசல்யாவின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்பதாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உறுதி தெரிவித்திருந்த நிலையில், தான் வேலைக்கு போவதாக கெளசல்யா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.