டி20 உலகக்கிண்ணம் : முதன்முதலாக அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை!!

301


NZ vs ENG

6 ஆவது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர்10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் முதலாம் பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் (6 புள்ளி), இங்கிலாந்து (6புள்ளி), இரண்டாம் பிரிவில் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தன.



நடப்பு சம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.



நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி நியூசிலாந்து தான். சுப்பர் – 10 சுற்றில் இந்தியா (47 ஓட்டங்கள் வித்தியாசம்), அவுஸ்திரேலியா (8 ஓட்டங்கள்), பாகிஸ்தான் (22 ஓட்டங்கள்), பங்களாதேஷ் (75 ஓட்டங்கள்) ஆகிய அணிகளை புரட்டியெடுத்து கம்பீரமாக அரையிறுதிக்கு வந்திருக்கின்றது.



இதுவரை நான்கு வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய போதிலும் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, நியூசிலாந்து பிரமாதமாக விளையாடி இருக்கின்றது.


அந்த அணியின் வெற்றிகளை அலசி ஆராய்ந்தால் சுழற்பந்து வீச்சாளர்களே பக்கபலமாக இருப்பது புரியும். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் இதுவரை 20 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள். சுப்பர் 10 சுற்றில் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அணியாக நியூசிலாந்து திகழ்கின்றது.

ஒட்டுமொத்தமாக அவர்களது பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு சராசரியாக 5.97 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மற்ற அணிகளை காட்டிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளனர்.


சுழற்பந்து வீச்சாளர்கள் சான்ட்னர் (9 விக்கெட்), சோதி (8 விக்கெட்) ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. துடுப்பாட்டத்தை எடுத்துக் கொண்டால் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் மட்டுமே அரைச்சதம் அடித்திருக்கிறார். என்றாலும் ஒருங்கிணைந்த அணியாக முதல்முறையாக இறுதி சுற்றை அடையும் வேட்கையுடன் இன்றைய அரையிறுதியில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்திலேயே மிகச்சிறப்பாக உள்ளது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகளிடம் தோற்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு தென்னாபிரிக்கா (2 விக்கெட் வித்தியாசம்), ஆப்கானிஸ்தான் (15 ஓட்டங்கள்), இலங்கை (10 ஓட்டங்கள்) ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.

இதில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ஓட்டங்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக துரத்தியடித்து உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (168 ஓட்டங்கள்), ஜோஸ் பட்லர் (123 ஓட்டங்கள்), ஜேசன் ரோய் (105 ஓட்டங்கள்), மோர்கன் உள்ளிட்டோர் துடுப்பாட்டத்தில் மிரள வைக்கக்கூடியவர்கள்.


எனவே நியூசிலாந்தின் சுழலுக்கும், இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் இடையிலான மோதலாகத் தான் இன்றைய போட்டி அமையும்.

2 ஆவது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதில் சுழற்பந்து வீச்சின் தாக்கமும் இருக்கும்.