ஒத்தையிலே நிற்கிறியே..

466

12966517_1059972127377704_1804989568_n

மங்கல நாண் பூட்டி
மதியொளி அழகு காட்டி
நெஞ்சுக்குள் குளிர்ந்தவனை
நெருப்பாற்றில் தொலைத்தாயோ.

புறநானூற்று வீரனம்மா.
புறமுதுகு காட்டவில்லை.
சதி வலையில் சிக்க வைத்தே
சிறைபிடித்துப் போனாரம்மா.

எண் பத்து ஆயிரமம்மா
யுத்தத்தில் விதவைகள்
நெருப்பாற்றின் வரலாறுகளம்மா.

கற்பாலே ஊர் எரித்த
கண்ணகியின் கோயிலிலே
தீச்சட்டி ஏந்தியவளே
உன் நெஞ்சத்து நெருப்பதனை
பெண் தெய்வம் அறியாதோ.

தமிழன் என்ற ஒரு சொல்லில்
உலகாண்ட சூரியனின்
தவப்புதல்வன் மனைவியம்மா- நீ
எதிரிக்கு விருந்தாக துவண்டுதான் போவியோ.

உன் மகவின் வாழ்விற்காய்.
நலமாக நீ வேண்டும்.
நாளை எம் விடியலிலே
நலமாக நீ வேண்டும்.

மறு வாழ்வு பூண வேண்டும்.
தமிழ் வாழ்வு, தளைக்க வேண்டும்.
உன் பாதை உறுதியாக
மண மேடை ஏற வேண்டும்.

குமுதினி ரமணன்
ஜேர்மன்.