நடிகர் பெரியார்தாசன் காலமானார்..!

337

periyarthasanபாரதிராஜாவின் `கருத்தம்மா´, `காதலர் தினம்´ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன்.

இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார்.

ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும்,வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர்.

 

அதேபோல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்தார்.