கருமையான தலைமுடியை இயற்கையாக பெற ஆசையா?

551

hair

தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான  தலைமுடி தற்போது பலருக்கு கிடைப்பது இல்லை ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் எமது பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில்  தலைமுடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால்,  தலைமுடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும்.

எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு  நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே  தலைமுடியை பராமரித்து கருமையான  தலைமுடியை நிலைக்க வைக்கலாம்.

கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும் இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம் . அதைப் படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வந்தால் இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

கறிவேப்பிலை

கருப்பான  தலைமுடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து சூடான எண்ணெயில் சேர்த்து ஒரு வாரத்திற்கு குளிர வைத்து பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால் கருமையான  தலைமுடியைப் பெறலாம்.

செம்பருத்தி எண்ணெய்

தலைமுடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால் கூந்தல் கருமையோடும் அடர்த்தியோடும்
வளரும்.

சீகைக்காய்

தலைமுடிக்கு ரசாயனம் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால் முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு கூந்தலுக்கு தடவி ஊறவைத்து குளித்தால்  தலைமுடியானது கருமையாக இருக்கும்.

கரட் ஜூஸ்

கரட் சாப்பிட்டால் அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.
எண்ணெய் மசாஜ்

தலைமுடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் பிரவுன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை சூடேற்றி தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும் கருமை நிறத்துடனும் இருக்கும்.

நல்லெண்ணெய்

அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால் அது  தலைமுடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

கூந்தல் பாதுகாப்பு

வெளியே வெயிலில் செல்லும் போது  தலைமுடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால்  தலைமுடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.