வவுனியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனால் வருமானத்தை இழந்த குடும்பத்திற்கு உதவி!!

446

வவுனியா கற்குழி பகுதியில் வசிக்கும் சுரேஸ்குமார் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் தரன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் முதலாம் ஆண்டு கல்வி கற்று வருகிறார். இரண்டு வயதில் இன்னொரு மகனும் இவர்களுக்கு உண்டு. தற்போது சுரேஸ்குமாரின் மனைவி மேகலா மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கும் நிலையில் உள்ளார்.

இந்நிலையில் மகனுக்கு அடையாளம் காணப்பட்ட இரத்தப்புற்று நோயால் மகரகம ஆஸ்பத்திரியில் தந்தையும் மகனும் ஒரு மாதகாலமாக நிற்பதால் நாளாந்தம் உழைத்து வாழும் குடும்பத்திற்கு வருமானம் போசாக்கான உணவின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதை சமூக ஆர்வலர் திரு.யோகநாதன் அடையாளம் கண்டு மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தார்.

இதன்படி நேரில் சென்று ஆராய்ந்து நிலமையை உணர்ந்து V3 அமைப்பினர் மூலம் ஆறுமாத காலத்திற்கான உலர்உணவு வழங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித நேய அடிப்படையிலான இந்த உதவித்திட்டம் நேற்று (21.06.2017) கற்குழியில் உள்ள இவர்களது வாடகை வீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவர்களுக்கு அயலவர்களின் உதவியும் உள்ளது. வரும் காலங்களில் உதவ விரும்புபவர்களும் முன்வரலாம் .மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் மற்றும் அயலவர் தர்சினியும் இதில் கலந்து கொண்டனர்.

அரசினால் கர்ப்பினிப்பெண்கள் மாதாந்தம் பெறும் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவுத்திட்டம் இவருக்குக் கிடைப்பதால் அதில் அடங்காத பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.