சிம் கார்ட் இல்லாத பொழுதும் அண்ட்ரொய்ட் பயனர்களின் இருப்பிடத் தகவல்களை சேகரிக்கும் கூகுள்!!

404

அண்ட்ரொய்ட் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன்மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுதும் அலைபேசி பயன்படுத்துபவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இயங்குதளம் (ஒப்பரேட்டிங் சிஸ்டம்) அண்ட்ரொய்ட் ஆகும். இது பிரபல தேடுபொறி நிறுவனமான கூகிளின் தயாரிப்பாகும்.

இந்நிலையில், அண்ட்ரொய்ட் இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன் மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரபல தொழில்நுட்ப இதழான குவார்ட்ஸில் தகவல் வௌியாகியுள்ளது.

நீங்கள் உங்கள் அலைபேசிகளில் இருப்பிட சேவையினை (லொகேஷன் சர்வீஸ்) அணைத்து வைத்திருந்த பொழுதும், அல்லது உங்கள் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், உங்களது இருப்பிடத் தகவல்களை அண்ட்ரொய்ட் இயங்குதளமானது சேகரித்து, இணையத்தில் இணைக்கப்பட்ட உடனேயே கூகுளுக்கு அனுப்புகிறது.
இவ்வாறு தாம் தகவல் சேகரிப்பதை கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர், ”இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பும் வேகம் மற்றும் செயற்திறனை அதிகரிக்கும் பொருட்டு, அலைபேசிகளின் செல் அடையாள எண்களை கூடுதல் சிக்னலாகப் பயன்படுத்துகிறோம்,” என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி, அண்ட்ரொய்ட் செயலியானது நமது அலைபேசிகளில் இருப்பிட சேவையினை (லொகேஷன் சர்வீஸ்) அணைத்து வைத்திருந்த பொழுதும், அல்லது அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், நமக்கு அருகில் உள்ள செல்போன் கோபுரங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து கூகுளுக்கு அனுப்புகிறது.

இதன் காரணமாக நமது இருப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை கூகிளால் பெற முடியும்.

அலைபேசியினை பேக்டரி ரீசெட் முறைக்கு மாற்றி வைத்தாலும் இதிலிருந்து விடுபட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.