அணைக்க முடியாத நெருப்புக் கிடங்குகள் : 59 ஆண்டுகளாக பற்றி எரியும் தீ!!

372

 
சீனாவில் நெருப்புக் குழிகள் என்னும் நிலப்பரப்பில் உள்ள சில குழிகளில், 59 ஆண்டுகளாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

சீனாவின் Chongqing பகுதியில், 1958ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக கிணறு ஒன்றை தோண்டியுள்ளனர். ஆனால், அங்கு அவர்கள் நினைத்த அளவிற்கான வளங்கள் இல்லை என்பது தெரிந்ததும், அதனை சரியாக மூடாமல் சென்றுள்ளனர்.

அப்போது எரியத் தொடங்கிய இந்த நெருப்புக் குழிகள், இன்னும் அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கின்றன. பசுமையான வயல்வெளிக்கு நடுவே உள்ள வறண்ட நிலத்திலேயே இந்த நெருப்புக் குழிகள் உள்ளன.

கணக்கிட்டால் 7 அல்லது 8 குழிகள் இருக்கும். Chongqing பகுதியில் உள்ள மக்கள், எரிந்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்பில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, இங்கு வந்து தண்ணீரை சூடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மேலும் சமையலுக்கு விறகு இல்லாத சமயங்களிலும், மக்கள் இந்த குழிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பழக்கங்கள் ஆபத்தானவை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த குழிகள் எரிவதற்கு காரணம், பூமியின் கீழ் இருக்கும் நிலக்கரி போன்றவை ஆக்ஸிஜனோடு இணையும் போது, அது ’தீ’யாக மாறுவது தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எரியும் இந்த நெருப்பை அணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தண்ணீரை ஊற்றினாலும் அணைந்து, அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் மீண்டும் பற்றி எரியத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலை நீண்டகாலம் தொடர்ந்தால், நிலத்தின் அடுக்குகளில் சரிவு ஏற்பட்டு, அந்தப் பகுதியில் மிகப் பெரிய குழிகள் ஏற்படலாம். அந்தப் பகுதியிலிருக்கும் கட்டிடங்களும் இடிந்து விழலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் இதனை முற்றிலுமாக அணைப்பதற்கான வழி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.