பருத்துறையில் தாதிய பரிபாலகராக பணிபுரியும் குணசீலனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டாமென வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் வைத்தியசாலையின் பணிப்பாளர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் தெரிவிப்பது, தற்போது யாழ்ப்பாண மாவட்டத்திலிலுள்ள பருத்துத்துறை ஆதார வைத்தியசாலையில் தாதிய பரிபாலகராக கடமையாற்றிவரும் குணசீலனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிகின்றோம்.
எமது வைத்தியசாலையினை பொறுத்தவரையில் தாதிய பரிபாலகர்கள் போதியளவில் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். தற்சமயம் குறித்த பரிபாலகரின் துணைவியாரும் , சகோதரியும் எமது வைத்தியசாலையின் தாதிய பரிபாலகராக கடமையாற்றி வருகின்றனர்.
அத்துடன் குணசீலன் தாதிய பரிபாலகராக கடமையாற்ற அனுமதிக்கப்படுமாயின் ஒர் குறித்த தாதிய பரிபாலகர்களது அலுவலக அறையில் கணவன், மனைவி, சகோதரி என குடும்பமாக கடமையாற்றுவது எமது தாதிய உத்தியோகத்திற்கு ஆரோக்கியமான விடயமாகாது.
குறித்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சமயத்தில் வைத்தியர்கள் , தாதியர்களுக்கிடையே நல்லுறவானது சிதைக்கப்பட்டு நாளிற்கு நாள் வைத்தியர்கள், தாதியர்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டு நோயாளர் பராமரிப்பை சரிவர வழங்க முடியாததால் நோயாளர்கள் பாதிப்படைந்தனர்.
அத்துடன் வவுனியா தாதியர் கல்லூரிக்கு வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், விஷேட வைத்திய நிபுனர்கள் இவருடைய முரண்பாடான செயற்பாடுகள் மற்றும் தாதிய பணிப்புறக்கணிப்பு என்பவற்றால் கல்வி கற்பிக்க செல்லாது புறக்கணித்தனர்.
நோயாளர் பராமரிப்பில் வைத்தியர்கள், தாதியர்களின் நல்லுறவானது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. குறித்த நபர் மீண்டும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்துவரும் சமயத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் தொடருமென நாம் அச்சத்திலுள்ளோம்.
தற்சமயம் வைத்தியர், தாதியர்களிடையேயான உறவானது சீராக நன் நிலையில் காணப்படுகின்றது. இதன் மூலம் நோயாளர் பராமரிப்பானது திறன்பட அமைக்கின்றது. எனவே இவரின் இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தினரும் இவரின் இடமாற்றத்தினை ரத்துச் செய்ய கோரி ஆதரவு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.