அம்மா, மனைவி, பிள்ளைகள் படுகொலை : தற்கொலைக்கு முயன்ற தந்தையின் உருக்கமான கடிதம்!!

317

சென்னையில் நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் தாயை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரத்தை அடுத்த பம்மலில் துணிக்கடை நடத்தி வருபவர் தாமோதரன், இவர் கிருஷ்ணா நகரில் தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று தனது தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தாமோதரன், பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தமோதரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்த ஜவுளிக்கடை அதிபர் தாமோதரன் உருக்கமாக 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். அன்புள்ள குமாரவேல் என்கிற ராஜாவுக்கு எழுதிக்கொள்வது உன்னிடம் நான் பலமுறை தொழில் செய்வதற்கு பணம் வாங்கினேன். எனக்குக் கொடுத்து உதவினாய். ஆனால் எனது தொழில் மேலும், மேலும் மந்தமாகிக் கொண்டே சென்றதால் என்னால் வசூல் செய்து கொடுக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நான் மட்டும் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால் எனது குடும்பம் நான் இருக்கும்போதே மிகவும் சிரமப்படுகிறது. நான் இறந்தும் சிரமப்பட எனக்கு மனம் வரவில்லை. இதனால் எனது குடும்ப உறுப்பினர்களையும் நான் என்னுடன் கொண்டு செல்கிறேன். இந்த முடிவுக்கு என்னைத் தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீர்விட்டு கேட்டுக்கொள்கிறேன்.

இதையடுத்து, தாமோதரன் வங்கி விவரங்கள், ஆவணங்கள் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு இரண்டு பக்க கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘பிரகாஷ் கிளாத் ஸ்டோர்ஸ் என்ற எனது கடையில் கல்லாப்பெட்டி அருகில் எனது ஆவணங்கள் உள்ளன. எனது நகைக்கடன் மற்றும் இதர விவரங்கள் எனது வசூல் பையில் உள்ளது.

எனது டாக்குமென்ட்டை வங்கியில் கொடுத்துள்ளேன். இத்துடன் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.