வவுனியா நகரசபை உட்பட இரு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி!!

276


 
வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) இன்று (13.12.2017) மாலை வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஈபிடிபி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பாக வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றுக்கான கட்டுப்பணம் இன்று (13.12.2017) பிற்பகல் 4 மணியளவில் கட்டப்பட்டுள்ளது.



மக்கள் போலித் தேசியம் பேசுபவர்களையும், போலி வாக்குறுதிகளை கொடுப்பவர்களையும் இனங்காணத் தொடங்கியுள்ளனர். இம்முறை நடைபெறப் போகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வவுனியாவில் ஆழமான கால் பதிக்கும். இளைஞர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கிராமங்கள், நகரங்கள் என செல்லும் இடமெல்லாம் எமது கட்சியையும், அதன் செயலாளர் நாயகத்தின் அபிவிருத்தியையும் மக்கள் அங்கீகரிகத் தொடங்கியுள்ளனர். இம்முறை புதிய மாற்றத்துடன் அபிவிருத்தி நோக்கி எமது கட்சி பயணிக்கும் எனத் தெரிவித்தார்.



இதில் கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.