30 ஆண்டுகளில் சொக்லேட் அழிந்து விடும் அபாயம்!!

1084


பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சொக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.



சொக்லேட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ பீன்ஸ் சொக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சொக்லேட் தயாரிக்கப்படுகிறது.

கொக்கோ மரங்கள் ஆபிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சொக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆபிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிக அளவில் உள்ளன.



இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


இதனால் சொக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. மழையின்மையால் கொக்கோ பயிரிடல் பெரியளவில் பாதிக்கப்படும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய மரங்களைப் போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆண்டிற்கு 1 இலட்சம் தொன் சொக்லேட் பற்றாக்குறை ஏற்படுகின்ற வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் தெரிவித்துள்ளார்.


பருவநிலை மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துவிட்டன. அந்த வரிசையில் கொக்கோ மரங்களும் இணைந்துகொள்ளும் அவல நிலை தோன்றியுள்ளது.