ஒரு மணி நேரத்தில் எயிட்ஸ் உள்ளதா எனக் கண்டறியலாம்..!

426

aidsஅமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நானோபயோசிம் என்ற நிறுவனமானது இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாகும்.

இங்கு மரபணு ராடார் எனப்படும் விலை குறைந்த அதேசமயம் ஒரு மணி நேரத்தில் எய்ட்ஸ் நோயைக் கண்டறியக் கூடிய மொபைல் கருவி ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒரு மனிதனின் இரத்தம், உமிழ்நீர் அல்லது உடல் திரவத்தில் ஏதாவது ஒரு துளி எடுத்து நானோசிப்பில் வைத்து இந்தக் கருவியின் மூலம் பரிசோதித்தால் ஒரு மணி நேரத்தில் எய்ட்ஸ் நோயைக் கண்டறிய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எய்ட்ஸ் குறித்து செய்யப்படும் தங்க நிர்ணய பரிசோதனையின் முடிவுகள் வெளிவர ஆறு மாதங்களாகும். அமெரிக்காவில் 200 டொலர் செலவில் குறைந்தது இரண்டு வாரங்கள் கழித்தே இதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ள இயலும்.

ஆனால் இந்த மரபணு ராடார் உபயோகிப்பதன் மூலம் 50லிருந்து 100 மடங்கு கம்மியான கட்டணத்தில் ஒரு மணி நேரத்தில் சோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ள இயலும் என்று நானோபயோசிம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான டாக்டர் அனிதா கோயல் தெரிவித்துள்ளார்.

இதன் விரைவான சோதனைகள் மூலம் நோய்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் அனிதா கூறினார். நோய் உள்ளவர் குறித்த தகவலைப் பதிவு செய்வதன் மூலம் நோய் பரவும் இடத்தையும் ஒருவரால் கண்காணிக்க முடியும், மேலும் இணையதளம் மூலமும் இதன் பயன்பாட்டைப் பெறமுடியும்.

அதுமட்டுமின்றி, மரபணு தடம் கொண்ட நோய்களையும் இந்த ராடார் கருவி மூலம் எளிதில் அறிந்து உடனடி மருத்துவ சேவைகளை ஒருவர் மேற்கொள்ளமுடியும். உட்கொள்ளும் மருந்துகளைப் பாதிக்கும் குளூடன் போன்ற காரணிகளுக்கு நோயாளியின் எதிர்ப்புத் தன்மையையும் இதன்மூலம் கண்டறிய முடியும் என்பதுவும் இந்தக் கருவியின் சிறப்பம்சமாகும்.

ஈ கோலி செல்களைக் கண்டறிய ஏற்கனவே ஒரு பயன்பாட்டை உருவாக்கியுள்ள இந்நிறுவனம், மலேரியா, காசநோய் போன்ற நோய்களை எளிதில் கண்டறியும் வண்ணமும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.