உள்ளூர் போட்டியில் சாதித்தும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட லசித் மலிங்க!!

451

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நிதாஸ் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் மலிங்க சேர்க்கப்படவில்லை.

இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் முத்தொடர் வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. >இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட மலிங்க மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

சரியாக விளையாடாமை மற்றும் உடற்தகுதி பிரச்சனையால் தவித்து வந்த மலிங்க கடந்த 24-ஆம் திகதி தொடங்கிய உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் என்.சி.சி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றார்.

மூன்று போட்டிகளில் பத்து விக்கெட்களை வீழ்த்தி அவர் அசத்தியிருந்த நிலையில் சர்வதேச அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

சமீபத்தில் பேட்டியளித்த இலங்கை அணி தெரிவுக் குழுத் தலைவர் கிரஹாம் லாப்ரோரி, மலிங்கவுக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை, தொடர்ந்து அவர் உள்ளூர் போட்டியில் சாதித்தால் 2019 உலக கிண்ண அணியில் அவரை சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.