மனைவியால் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து : முகமது ஷமி!!

541


ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பல்வேறு புகார்கள் கூறும் தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



உத்திரப்பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் இதுதொடர்பாக பேசிய ஷமி, தம் மீது கூறப்பட்ட புகார்களில் எந்த உண்மையும் இல்லை என விளக்கினார்.

தமது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கவே திட்டமிட்டு தம் மீது அடுக்கடுக்காக புகார் கூறப்படுவதாக தெரிவித்த ஷமி, இதுதொடர்பாக தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



தம் மீது தினமும் விதவிதமான புகாரை தனது மனைவி ஹசின் ஜஹான் ஊடகங்களில் தெரிவித்து வருவதாகவும், புகார் தெரிவிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தாலே எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என்றும் ஷமி அப்போது குறிப்பிட்டார்.



விவகாரத்து கேட்டு தனது மனைவியை தாம் மிரட்டியதாக கூறியதில் உண்மையில்லை எனத் தெரிவித்த ஷமி, தனது மகளின் எதிர்கால நலன் கருதி, மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் ஷமி அப்போது தெரிவித்தார்.


இதற்கிடையே, முகமது ஷமியின் புகாருக்கு அவரது மனைவி ஹசின் ஜஹான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான குற்றச்சாட்டில் இருந்து தற்காத்து கொள்ளவே இதுபோன்ற புகார்களை முகமது ஷமி தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.


தமது தவறை ஒப்புக்கொண்டு தம்மிடம் திரும்பி வந்தால், கணவர் முகமது ஷமியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.