வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

254

கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த இஸ்ஹாக் அஹமட் வயது 33 என்பவரே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை பகுதியிலிருந்து கந்தளாயிக்கு சென்ற முச்சக்கர வண்டியும், கந்தளாயிலிருந்து திருகோணமலை பகுதிக்குச் சென்ற முச்சக்கர வண்டியுமே மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.