கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வருகிறார் சசிகலா!!

343

உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பிணையில் வருகிறார் சசிகலா.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.

கடந்த ஆண்டு கணவர் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது பிணையில் வந்திருந்த சசிகலா, சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்.

கடந்த 16ம் திகதி நடராஜன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சசிகலா பிணையில் வருவார் என கூறப்பட்டது.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி இருந்தனர். சிறை நிர்வாகத்திடம் பிணை கேட்டு விண்ணப்பித்தனர்.

எனினும் முதலில் கணவர் நடராஜன் சுகயீனமுற்று இருந்த போது பிணையில் வெளியில் வந்து 5 மாதங்களே ஆன நிலையில் கணவர் இறந்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை நடராஜன் உயிர் பிரிந்தது. இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும்.

பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும்.

இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா பிணையில் வருகிறார். நடராஜனின் இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் பெங்களூரு நிர்வாகம் சசிகலாவுக்கு பிணை வழங்கும்.