பொலிஸாரின் சுற்றி​வளைப்புக்கு அஞ்சி ஆற்றில் பாய்ந்த இளைஞன் பரிதாபமாகப் பலி!!

310

 
கிண்ணியா மணல் ஆறு பிர​தேசத்தில் பொலிஸாரின் சுற்றி​வளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் இன்று (21.03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மஹாவலி ஆற்றில் நேற்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில் தப்பிச்​செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல்போன இளைஞனே கடற்படையினரின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்து மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.