ஆற்றில் மூழ்கி பலியான மாணவனின் சடலம் மீட்பு!!

258

கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவன், சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன்(வயது – 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இன்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார்.

தன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி தற்பொழுது உயிரிழந்த மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது காழிடறி தவறி நீர்தேகத்தில் வீழ்ந்துவிட்டார்.

இவரை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்தேகத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.

இருந்தும் நீர்தேகத்தில் வீழ்ந்த மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இன்று காலை கடற்படை சுழியோடிகளினால் மீட்கப்பட்ட மாணவனை ஹட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.