புனிதத்தலம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் : 32 பேர் பலி!!

439

ஆப்கானிஸ்தான் நாட்டில் நவ்ருஸ் எனப்படும் பாரசீக புத்தாண்டு தினம் வசந்தகால தொடக்கவிழாவாக நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், காபுல் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கர்ட்-இ ஷாகி தர்கா பகுதியில் ஏராளமானவர்கள் வழிபாட்டுக்காக குவிந்தனர். அப்போது, அங்கு வந்த மனிதகுண்டு தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரசீக புத்தாண்டை வசந்தகாலத்தின் தொடக்க விழாவாக கொண்டாடும் ஷியா பிரிவினரின் நம்பிக்கைக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பழைமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கும் தங்களது இயக்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலிபான் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இது தங்களது கைவரிசைதான் என உள்ளூரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர்.