விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : மேஷம்!!

707


மேஷ ராசி வாசகர்களே, பிரச்சினைகளைச் சமாளிக்கும் தைரியம் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்குள்ளேயே சுக்கிரன் நிற்கும்போது, இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றிபெறுவீர்கள். திருமணம் கூடி வரும்.



புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது நன்கு முடியும். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்; வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் பெருமைகளைச் சொல்லி சொந்தபந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள்.



ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். இந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பரிவாக நடந்து கொள்ளுங்கள்.



கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், 13.03.2019 முதல் இந்த வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 9-ம் வீட்டில் அமர்வதால் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள்.


இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால் நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றிக் குறைத்துப் பேச வேண்டாம். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப் பாருங்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால் சொத்து விஷயங்களில் சுமுகத் தீர்வு காண வேண்டும். உறக்கம் குறையும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 12.02.2019 வரை கேது 10-ம் வீட்டிலும் ராகு 4-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்களில் சற்று நிதானம் தேவை. ஆனால், வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.


என்றாலும், தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், 13.02.2019 முதல் 9-ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் தாமதம் வரும். ராகு பகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் வந்தமர்வதால் புது வீடு மாறுவீர்கள். பழைய வண்டியை மாற்றி விட்டுப் புது வண்டி வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டியில் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் சில உதவிகள் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.

02.08.2018 முதல் 30.08.2018 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தங்க நகைகள் தொலைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்திகளைக் கையாளுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடு சென்று வருவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகள் விற்று தீரும். கூட்டுத் தொழிலில் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.


வெகுநாட்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆனி, மாசி மாதங்களில் கிடைக்கும். பொய் வழக்கு தள்ளுபடியாகும். கணினித் துறையினர்களுக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைகழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுக்கும்.

பரிகாரம்: வேலூர் மாவட்டம், வள்ளிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்ரமணியரையும், ஸ்ரீவள்ளியையும் பூசம் நட்சத்திரத்தில் சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்.