விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : கன்னி!!

561

கன்னி ராசி வாசகர்களே, கனவிலும் கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிப்பவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். 14.04.2018 முதல் 03.10.2018 வரை குரு பகவான் 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை 3-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் காரிய தடைகள் வந்து நீங்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார்.

பழைய நண்பர்களில் சிலர் விலகுவார்கள். பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாக 4-ல் அமர்வதால் இழுபறியான காரியங்களெல்லாம் முடிவடையும். ராசிநாதன் புதன் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். எங்கே சென்றாலும் வெற்றி கிடைக்கும். எதிலும் மகிழ்ச்சி உண்டு. இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 4ம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். மறதியால் பணம், விலை உயர்ந்த ஆபரணத்தை இழக்க நேரிடும்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. சகோதரியின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

22.03.2019 முதல் 13.04.2019 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்கு கேது 4ம் வீட்டிலும், ராகு 10-லும் அமர்வதால் வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் புதிய திட்டம் தீட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். மூத்த அதிகாரிகளின் மனதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. சித்திரை மாதத்தில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சாதித்துக் காட்டுவீர்கள். பழைய சம்பளப் பாக்கியும் கைக்கு வரும்.

இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் ஓரளவு முன்னேற்றத்தையும் மையப்பகுதியில் பண வரவையும் இறுதிப் பகுதியில் அலைச்சலுடன், உடல்நலக் குறைவைத் தந்தாலும் வெற்றிபெற வைக்கும்.

பரிகாரம்: சென்னை மாவட்டம், திருமுல்லைவாயலில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு பச்சையம்மனை செவ்வாய்க்கிழமைகளில் சென்று அர்ச்சனை செய்து வணங்குங்கள்.