விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : மீனம்!!

605

மீன ராசி வாசகர்களே, மென்மையும் விட்டுக் கொடுக்கும் மனமும் எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும் சமயோஜிதமாகவும் யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள்.

தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்களின் பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் குரு நுழைவதால் சில இடங்களில், சில நேரத்தில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.

எதிர்பார்த்த நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை உங்களின் ராசிநாதன் குரு பகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் வந்தமர்வதால் உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் அதிகப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

05.07.2018 முதல் 01.08.2018 வரை சுக்கிரன் 6-ல் இருப்பதால் வீட்டு உபயோகச் சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயல்வீர்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும் கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.

14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை வந்து நீங்கும். 1

3.02.2019 முதல் வருடம் முடியும்வரை 4ல் ராகு நுழைவதால் வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபத்தைக் காண்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலிப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களின் நெடுநாள் கனவான பதவி உயர்வும் சம்பள உயர்வும் வருடத்தின் மத்தியில் உண்டு. எப்போதும் உங்களைக் குறைசொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக் குறைவுகளைத் தந்தாலும் பணப் புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.