விளம்பி தமிழ் புதுவருட ராசிபலன் : 12 ராசிகளுக்கும் ஒரே பார்வையில்!!

487


விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது.



இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுசில் செவ்வாய்,சனி, மீனத்தில் சந்திரன் புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பொழிந்து விவசாயம் செழிக்கும்.

மேஷம் – தைரியம் மிக்க மேஷ இராசிக்காரர்களே! சூரியன் மேஷ இராசியில் உச்சத்தில் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் இராசிநாதன் செவ்வாய் 9ஆம் இடத்தில் சனியோடு சேர்ந்திருக்கிறார். ஆரம்பித்தில் சின்னச் சின்ன கஷ்டங்கள் இருந்தாலும் குரு, சனி பகவானின் அருளால் நன்மையே நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு இந்த ஆண்டு புது வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



ரிஷபம் – அழகுணர்ச்சி மிக்க ரிஷப இராசிக்காரர்களே! புது வருட ஆரம்பத்தில் குருவின் சஞ்சாரத்தால் சில சங்கடங்கள் நேர்ந்தாலும் புரட்டாசிக்குப் பின்னர் தொட்ட காரியம் துலங்கும். பலருக்கும் திருமணம் கைகூடும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் புது வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்து குடி போகும் யோகம் கை கூடி வருது. மாசி மாதத்திற்கு பின்னர் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. அலுவலகத்தில் வார்த்தையை கவனமாக உபயோகிக்கவும், இல்லாவிட்டால் வம்பாக போய்விடும்.



மிதுனம் – புத்திசாலித்தனம் மிக்க மிதுன இராசிக்காரர்களே! உங்கள் இராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் அதிர்ஷ்ட காற்று வீசும். உடல் நலனிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும். திடீர் சொத்துக்கள் கிடைக்கும். கண்டக சனி காலமாகையால் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.


கடகம் – கற்பனை திறன் மிக்க கடக இராசிக்காரர்களே! 4ஆம் வீட்டு குருவால் நன்மைகள் இல்லை என்றாலும் புரட்டாசிக்குப் பின்னர் 5ஆம் வீட்டுக்குக் குரு செல்வதால் திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். 6ஆம் இடத்து சனியால் அனைத்தும் கைகூடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் வரும். பணவரவு அதிகரிக்கும்.

சிம்மம் – தன்னம்பிக்கை கொண்ட சிம்ம இராசிக்காரர்களே! முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், சுகஸ்தானமாகிய நான்காவது வீட்டில் புரட்டாசிக்குப் பின்னர் அமரப்போகிறார். மனதில் தைரியம் அதிகரிக்கும். நிலம் வீடு வாங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடகை வீட்டில் உள்ள சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்கள் குடும்ப விஷயத்தில் பிறரை தலையிட அனுமதிக்காதீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். லட்சுமி நரசிம்மரை வணங்கி வர நல்லதே நடக்கும்.


கன்னி – அறிவுக்கூர்மை கொண்ட கன்னி இராசிக்காரர்களே! குரு பகவான் உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசிக்குப் பின்னர் முயற்சி ஸ்தானமாகிய மூன்றாமிடத்திற்கு செல்கிறார். புதன்பகவான் நேரடியாக பார்ப்பதால் தோற்றத்தில் பொலிவும் ஆளுமைத்திறனும் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 4ஆம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். மறதியால் பணம், விலை உயர்ந்த ஆபரணத்தை இழக்க நேரிடும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இந்த ஆண்டு கிடைக்கும்.

துலாம் – எதையும் சரிசமமாக பாக்கும் நியாய குணம் கொண்ட துலாம் இராசிக்காரர்களே! புத்தாண்டு பிறக்கும் போது ஜென்மஇராசியில் அமர்ந்திருக்கிறார் குரு. சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், குரு பார்வையால் சில நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தன ஸ்தானத்தில் அமரும் குருவினால் பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் இராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். அலுவலகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். கேதுவினால் தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டமாக சொத்து சேர்க்கை ஏற்படும்.

விருச்சிகம் – அமைதியும், அன்பும் கொண்ட விருச்சிக இராசிக்காரங்களே! உங்கள் இராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், புரட்டாசிக்குப் பின்னர் உங்கள் ஜென்ம ராசியில் குரு அமர்ந்தாலும் குரு பார்வை பெரும் இடங்களால் அதிக நன்மை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு – எதையும் நேர்மையாக அணுகும் தனுசு இராசிக்காரர்களே உங்கள் இராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசிக்குப் பின்னர் உங்களின் இராசிநாதன் குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இராசியிலேயே அமர்ந்திருப்பதால் சிலர் புது வீட்டிற்கு குடியேறுவார்கள். ஜென்மச் சனியாகத் தொடர்வதால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்.


மகரம் – பொறுமை குணம் கொண்ட மகர இராசிக்காரர்களே! உங்கள் இராசிக்கு 10வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறக்கிறது. வருமானம் உயரும். வீட்டிலும் அலுவலகத்திலும் பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும். ஏழரை சனி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் விரயச் சனியாகத் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

கும்பம் – குடத்தில் இட்ட தங்கம் போல இருக்கும் கும்ப இராசிக்காரர்களே! குரு உங்கள் இராசிக்கு 9வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் இராசியை பார்ப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். புரட்டாசிக்கு பின்னர் குரு பகவான் உங்கள் இராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம். உங்கள் இராசி அதிபதி சனி, இராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செல்வ வளம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் அதிகம் நடக்கும்.

மீனம் – ஆழ்கடல் அமைதி போல எதையும் மனதில் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும் மீன இராசிக்காரர்களே! இராசி நாயகன் குரு புரட்டாசி 18ஆம் தேதி வரை அட்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் என்றாலும் குடும்ப ஸ்தானம், 4ஆம் இடம், 12ஆம் இடங்களை பார்ப்பதால் நன்மையே நடக்கும். புரட்டாசி 18ஆம் தேதிக்குப் பின்னர் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வீடு, மனை வாங்குவீர்கள். திருமணம் கை கூடி வரும். செவ்வாய் கேது சேர்க்கையால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்