அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி!!

366


சிரியா மீது அமெரிக்க கூட்டுபடைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.



ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய இரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10ம் திகதி நடைபெற்றது.

சர்வதேச இரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா முன்வைத்தது.



ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷ்யா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.



அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் சிரியா விவகாரத்தில் செய்ய வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியிருந்தார்.


இதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டது.


இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.

சிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு தெரிவித்தது.

அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

எத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


-மாலைமலர்-