வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு இவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (16.04.2018) காலை வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசா மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்களிப்பின் போது சேனாதிராசா 09 வாக்குகளையும் கௌதமன் 11 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.
வவுனியா நகரசபையைக் கைப்பற்றுவது யார் என்பதில் பல நாட்களாக இழுபறி நிலவிவந்த நிலையில் இப் பிரச்னை இன்று ஒருவாறாக முடிவிற்கு வந்துள்ளது.