கடற்கரையில் குழி தோண்டிய மீனவருக்கு கிடைத்த இரும்புப் பெட்டி!!

315

 

மன்னார் – பேசாலை, கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு தொகுதி மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டியுள்ளார்.

இதன்போது இரும்பு பெட்டியொன்று அங்கிருப்பதை அவதானித்த அவர் அருகிலுள்ள கடற்படையினரிடம் இது தொடர்பில் அறிவித்து, பின் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன், நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.