வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை!!

840

வவுனியா புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் மிகவும் பெரிதாகவும் தமிழ், ஆங்கில மொழிகளில் மிகவும் சிறிதாகவும் காணப்படுவது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

90 சதவீத தமிழ் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் தமிழ் மொழியையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளதுடன், இல்லாவிட்டால் 3 மொழிகளையுமே ஒரே அளவில் பொறித்திருக்கலாம் எனவும் பொது அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரச கரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் பட்சத்தில் பெரும்பான்மையாக தமிழர் வாழ்கின்ற பகுதியிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுவது இன நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் கேடு விளைவிப்பதாகவே அமையும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் முகமாக அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.