வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் குழப்பம் : கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சிகள்!!

514

 

வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டனர்.

சுமந்திரன் எம்.பி, அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் உடனடியாக அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது. இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முரண்பட்டனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் உறுப்பினரை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் தரப்பினர் கடத்தி சென்றே கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கட்சியின் வவுனியா அமைப்பாளர் கருணாதாச குற்றம் சுமத்தினர்.

ஆனால் அங்கு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அதனை மறுத்திருந்தார். குறிப்பிட்ட பெண் வேட்பாளரும் அந்த குற்றச்சாட்டை மறுத்து தனது விருப்பப்படியே செயற்பட்டதாக சபை தவிசாளர் தெரிவில் செயல்பட்டதாக தெரிவித்தார்.

இதன்பின் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்.