வவுனியா நகர சபை மற்றும் வெண்கலச் செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்றபோதும் அந்தச் சபைகளில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. வவுனியா நகர சபையை, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும், வெண்கலச் செட்டிகுளம் பிரதேச சபையை சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கைப்பற்றின.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவைக் கோரி நேற்று முன்தினம் இரவு வரையில் பேச்சு நடத்தியது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தப் பேச்சுக்களில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. அவர் சார்பில் மூன்றாம் தரப்பினரே, கூட்டமைப்புடனான பேச்சுக்களில் பங்கேற்றிருந்தனர்.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியையும், வவுனியா நகரசபையின் உபதவிசாளர் பதவியையும் அவர்கள் கோரியிருந்தனர். கூட்டமைப்பும் அதற்கு இணங்கியிருந்தது. இறுதி நேரத்தில் அவை எவையுமே வேண்டாம் என்றும், தாங்கள் நடுநிலமை வகிக்கப் போகின்றோம் என்று கூட்டணியினர் தெரிவித்திருந்தனர். கூட்டணியினரை மசிய வைக்க கூட்டமைப்பு எவ்வளவோ முயன்றது.
இந்த நிலையில் வவுனியா நகர சபைத் தவிசாளர் தெரிவுக்கான அமர்வு நேற்றுக் காலை ஆரம்பமாகி, தவிசாளர் தெரிவுக்கான பெயர்கள் முன்மொழியப்படும் வரையில், கூட்டணி சார்பில் ஒருவர் போட்டியிடப் போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியாது.
கூட்டணியினர், ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி, மகிந்தவின் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி என்பவற்றின் ஆதரவுடன் தமது தவிசாளரை அறிவித்தனர்.
கூட்டணியின் இந்தத் திடீர் நடவடிக்கையானால் கூட்டமைப்பு திக்குமுக்காடிப் போய், இறுதியில் தவிசாளர் பதவியை இழந்தது. கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கை சறுக்கியது.
-உதயன்-