குழந்தையின் பிறப்பில் சந்தேகம் : தரையில் ஓங்கி அடித்து கொலை செய்த கணவன்!!

302

தமிழகத்தில் சந்தேகத்தில் குழந்தையை தீர்த்து கட்டிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள திருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்மணிராஜா(32). இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜமுனாராணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஹகின்(5) என்ற மகனும், சஞ்சனா(2) என்ற மகளும் பிறந்தனர். அதன் பின் கடந்த மீண்டும் கர்ப்பமான ஜமுனாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த அந்த குழந்தையால், ஜமுனாராணியின் நடத்தையில் கண்மணிராஜா சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய கண்மணி ராஜா, இப்போது பிறந்த 3-வது குழந்தை யாருக்கு பிறந்தது என்று கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு ஜமுனாவின் கையில் இருந்த அந்த ஒன்றரை மாத குழந்தையை திடீரென பறித்து தரையில் ஓங்கி அடித்ததால், அக்குழந்தை சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துள்ளது.

இதைக் கண்ட ஜமுனா தன் கண்முன்னே குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டதால், கதறி அழுதுள்ளார். அதன் பின் குழந்தையை ஒரு சேலையில் சுற்றி வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் காலை ஜமுனாராணி அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கண்மணிராஜாவை பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதோடு குழந்தையை கொன்று புதைத்த இடத்தை காண்பித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் அவளிடம் கூறினேன்.

ஆனால் அவள் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அதிகளவில் ஆத்திரம் வரும், இதனால் குழந்தையை தரையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.