பயணிகள் விமானத்தை இடைமறித்த ராணுவம் விமானம் : நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!

294


ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானம் ஒன்றை கட்டார் ராணுவம் விமானம் இடைமறித்து அச்சுறுத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரத்தில் ஐக்கிய அமீரக விமானியின் சாமர்த்தியத்தால் 86 பயணிகள் உயிர் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.



ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானமானது பஹ்ரைன் வான் எல்லை வழியாக சென்றுள்ளது. அப்போது கட்டார் ராணுவத்தின் போர் விமானம் ஒன்று மிக அருகாமையில் வந்து பின்னர் விலகிச் சென்றுள்ளதாக ஐக்கிய அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயணிகள் விமானம் வலுக்கட்டாயமாக பாதை மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஞாயிறு அன்று நடந்த இச்சம்பவத்திற்கு பஹ்ரைன் விமான சேவை நிர்வாகமும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கட்டார் ராணுவத்தின் போக்கை விமர்சித்துள்ளது.



சர்வதேச வான் எல்லையில் இருந்த போது குறித்த பயணிகள் விமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது கவலை அளிப்பதாக பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.



இது சர்வதேச ஒழுங்குமுறையை மீறும் செயல் எனவும் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளது.


கடந்த 2017 ஆம் ஆண்டு பஹ்ரைன் மற்றும் அக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகள் கட்டார் மீது தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி கடும் பொருளாதார தடை விதித்தது. மட்டுமின்றி அரேபிய நாடுகளில் கட்டார் விமானங்களை அனுமதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், கட்டார் விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையில் கடக்க நேர்ந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது