ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : கொழும்பில் நடந்த துயரச் சம்பவம்!!

482

கொழும்பில் இருந்து ராகம நோக்கி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசனத்திலேயே அமைதியாக உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வேயங்கொடை – அம்பேவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுதர்மா என்ற பெண்ணை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து ராகம நோக்கி பயணித்த பேருந்து, இரவு 7.30 மணியளவில் ராகம பிரதேசத்தை நெருங்கியுள்ளது. எனினும் இந்த பெண் பேருந்தில் இருந்து இறங்காமல் ஆசனத்திலேயே அமர்ந்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த நடத்துனர் அவர் உறங்கிவிட்டதாக எண்ணி அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். எனினும் அவர் எழுந்திருக்காத காரணத்தினால் உடனடியாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றை வரவழைத்துள்ளார். குறித்த பயணியை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது கைப்பையை சோதனையிட்ட போது ரயில் அனுமதி பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை உட்பட ஆவணங்கள் காணப்பட்டுள்ளது. அதற்கமைய அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.