ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 23 பேர் மாயம்!!

321

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 40 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திரப்பிரதேச மாநிலம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

படகில் பயணித்த சிலர் நீந்தி கரை திரும்பிய நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார். விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இந்நிலையில், எஞ்சிய 23 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.