இரு வேறு பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டிகள்!!

310


 

மன்னார் மற்றும் கம்பளை பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



மன்னார் : மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் இன்று காலை செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது. இதன்போது குறித்த இளைஞர் முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.



மன்னார் மாவட்டச் செயலகத்திற்குள் சென்று தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு உதவியை நாடிய போதும் அங்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.



சிறிது நேரத்தின் பின் மன்னார் நகர சபையூடாக பௌசர் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரத்தின் பின் தீ அணைக்கப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.


கம்பளை : கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்த வேளையில் முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்துள்ளது.

இதன்போது ஓட்டுனரும், அதில் பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.