ஆசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். சிவநாதன் கிந்துசன் (19) என்ற இளைஞனே ஆசிய ரீதியில் கொழும்பு சுகாதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 5000 மீற்றர் ஒட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பதக்கத்தை வெற்றி பெற்ற இளைஞனை கௌரவிக்கும் முகமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் அதிகாரிகளால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்,
அதனைத்தொடர்ந்து வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நண்பர்கள் மற்றும் வர்த்தகர்களால் சாதனை படைத்த எஸ்.கிந்துஜன் மற்றும் பயிற்றுவிப்பாளர் கெ.நவநீதன் ஆகியோர் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு மீண்டும் வாகன பவனியாக கண்டி வீதியூடாக வவுனியா பிரதேச செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டு பிரதேச செயலாளர் க.உதயராசா அவர்களினால் சாதனை படைத்த சிவநாதன் கிந்துசன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிவநாதன் கிந்துசனின் சாதனையை பாராட்டியும் அவரை மென்மேலும் ஊக்கப்படுத்தியும் உதவி பிரதேச செயலாளர் திருமதி. க.சாரதா அவர்களால் பரிசுத்தொகை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிவநாதன் கிந்துசனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.