மனிதரின் வயிற்றுக்குள் இப்படியும் இருக்குமா?

550

மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்பது முற்றிலும் உண்மை.. இவற்றின் பதிப்பே இந்த புகைப்படம், ஒருவரின் மலச்சிக்கல் பாதிப்பால் அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்து எடுக்கப்பட்ட 28 பவுண்ட் எடையுள்ள இந்த சதை கழிவு.வாய் துர்நாற்றத்தில் தொடங்கி இருதய நோய் வரை அனைத்திற்கும் காரணமாகிறது இந்த மலச்சிக்கல்.

காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள்.

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது, நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது, தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆக ஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.