11 பேரை சுட்டுக் கொன்ற பொலிஸ் : தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு இரத்தக்கறை!!

736

தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது. போராட்டம் 25 நாள், 50 நாள் என கடந்து 100-வது நாளை எட்டியது.

இதையடுத்து தங்கள் கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்தனர். பேரணியாகச் சென்று மனு அளிக்க அனுமதி கேட்டனர்.

ஆனால் சாதாரணமாக அனுமதி கொடுத்து போராட்டப் பாதையை வகுத்துக் கொடுத்து மனுவைப் பெற வேண்டிய மாவட்ட நிர்வாகம் தலைகீழாக நடந்துகொண்டு போராட்டத்தை கடுமையாகக் கையாண்டது.

இதன் விளைவு பேரணி சொற்ப எண்ணிக்கையில் இருந்த பொலிசாரையும் மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை வெடித்தது

பொலிசார் தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னர் 1980-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று குருஞ்சாக்குளத்திலேயே விவசாயப் போராட்டத்தில் 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

தனியார் ஒருவரால் நடத்தப்படும் ஒரு ஆலையை அகற்ற பொதுமக்கள் மாவட்டம் முழுதும் போராட, போராட்டத்தை அலட்சியமாக கையாண்டு 11 பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் பலியானது இதுவே தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாகும்.