லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகனை தாக்கிய தமிழர்கள் : 3 பேர் கைது!!

341

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

நேற்று போராட்டம் 100-வது நாள் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியைப் பல்லாயிரக்கணக்கானோர் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகினர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இதையடுத்து இன்றும் பொலிசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இளைஞர் ஒருவர் பலியாகினார். நேற்று மற்றும் இன்று சேர்த்து மொத்தம் 13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்டெர்லைட் ஆலை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் தலைவராக அனில் அகர்வால் உள்ளார்.

இந்நிலையில் லண்டனில் அமைந்துள்ள அனில் அகர்வால் வீட்டு முன்பு தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டு, அவருக்கு எதிராக கண்டனமுழுக்கங்கள் எழுப்பினர்.

கைகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளதாகவும், இதனால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.