மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வயலுக்கு சென்ற முதியவரின் தலையை வெட்டி கொன்ற கொடூரம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாங்குளத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் விவசாய வேலை மற்றும் நகை தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்.
இன்று ஊரில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்வதற்காக ராமு சென்றிருக்கிறார். எப்போதும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விடும் ராமு வழக்கமான நேரம் தாண்டியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்றிருக்கின்றனர்.
தோட்டத்தில் ராமுவின் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு தனி தனியே கிடந்திருக்கின்றன. முதியவர் ராமு இறந்து கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறிய குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தினர்.
காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முதியவருக்கு அய்யம்மாள் என்கிற மனைவியும் , 4 பெண்குழந்தைகள் மற்றும் 1 மகன் இருக்கிறார்கள்.
குடும்பத்தாரிடம் இதுபற்றி விசாரித்த காவல்துறைக்கு முதியவர் ராமுவிற்கு நிறைய பகையாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.