இரும்பு கம்பி, உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்ட பொதுமக்கள் : பொலிசாரின் வெறியாட்டம்!!

346

 

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது பொலிசாரின் கொலைவெறி தாக்குதல் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடும் வரை வீடு திரும்ப மாட்டோம் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்ட பொது மக்களுக்கும், பொலிசாருக்கும் மோதல் வெடித்தது.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 உயிர்களை காவு வாங்கிய தமிழக அரசு, 13 உயிர்ப்பலியுடன் 102 பொதுமக்கள் காயம், 34 காவலர்கள் காயம், 98 வாகனங்கள் சேதம் என அதிகாரப்பூர்வ அறிக்கையையும் ஈவு இரக்கமில்லாமல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த அதே தினத்தில், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றோம் என்ற பெயரில், சாலையில் வருவோர் போவோர் மட்டுமில்லாது, வீட்டில் தூங்கியவர்களையும் இழுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒன்று சேர்த்து, உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு ராடு, ரப்பர் டியூப் ஆகியவற்றைக் கொண்டு இழுத்துவரப்பட்ட ஆண்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியது காவல்துறை.

பொலிசாரின் வெறியாட்டத்தால் உருக்குலைந்த 92 நபர்களில் சுமார் 16க்கும் மேற்பட்டவர்களுக்கு மண்டையை உடைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

மட்டுமின்றி 65 நபர்களை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கும் சித்ரவதை செய்துவிட்டு வல்ல நாடு துப்பாக்கிச்சூடுதளத்திற்கு அனுப்பி சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளது. பின்னர் சமூக ஆர்வலர்களின் முயற்சியால்  அத்தனை நபர்களும் விடுவித்துள்ளனர்.