சொதப்பிய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் : அபார வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவு அணி!!

413

 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவு சென்றுள்ள இலங்கை அணி, அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்ப்யினில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 414 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

மேற்கிந்திய தீவு அணி சார்பில் ஷான் டவ்ரிச் சதம் அடித்து 125 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது.

இலங்கை அணியில் சண்டிமால் 44 ஓட்டங்களும். டிக்வெல்லா 31 ஓட்டங்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

மேற்கிந்திய தீவு அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

தொடர்ந்து, மேற்கிந்திய தீவு அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அந்தணி அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 453 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று ஒரு நாள் மீதமுள்ளதால் 277 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், இலங்கை அணி இன்று 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்கள் எடுத்து 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி சார்பில் துவக்க வீரர் குசால் மெண்டிஸ் சதம் அடித்து 102 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவு அணி சார்பில் ரோஸ்டர் சேஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவு அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.