வவுனியா நகரசபையில் சட்டவிரோத கடை விவகாரத்தில் கடும் விவாதம்!!

509

வவுனியா நகரசபையின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புதிய கடை ஒன்று தொடர்பில் ஏற்பட்ட விவாதம் கடும் தர்க்கங்களுடன் வாக்கெடுப்பு வரை சென்றது.

வவுனியா நகரசபையின் மூன்றாவது அமர்வு இன்று நகரசபை மண்டபத்தில் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த கடை நகரசபையின் காணியில் நகரசபையின் உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு, வவுனியா நகரசபை செயலாளரால் பூட்டப்பட்ட நிலையில் அக் கடை திறக்கப்பட்டமை பற்றி உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து குறித்த விவகாரம் சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது குறித்த கடை நகரசபையின் அனுமதியை மீறி நகரசபை செயலாளரால் அனுப்பப்பட்ட மற்றும் ஒட்டப்பட்ட கடிதங்களை அவமதித்து கட்டப்பட்ட நிலையில் தம்மால் கட்டட வேலைகள் தடை செய்யப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக நகரசபை செயலாளர் இ.தயாபரன் சபையில் தெரிவித்திருந்தார்.

இதன்போது நகரசபை உறுப்பினர் ரி. கே.இராஜலிங்கம் குறித்த கடை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பாக தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகரசபை தலைவர் மற்றும் செயலாளரிடம் கேட்ட கேள்விகளை சபையில் வாசித்ததுடன் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த விடயம் சபையில் கடும் விவாதத்தை உண்டு பண்ணியது.

நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி, லரீப், பாயிஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து குறித்த கடையினை வவுனியா நகரசபை குறித்த வியாபார நிலையத்தை நடத்தியவருக்கே நீண்டகால குத்தைகைக்கு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன், நகரசபை அக்கட்டிடத்தை கட்டும் போது என்ன செய்தது என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனை எதிர்த்த நகரசபை உறுப்பினர் சி.காண்டீபன் குறித்த கடை நகரசபைக்கு சவால் விடுக்கும் வகையில் சட்டவிரோதமாக மூன்று மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்க முடியாது. குறித்த கடை அமைந்துள்ள நிலம் நகரசபைக்கு சொந்தமானது. கட்டடம் கட்டும் போது நகரசபை செயலாளர் தடுத்த போதும் அதையும் மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது ஒரு தவறான முன்னூதாரணமாக அமையக் கூடாது.

தூய அபிவிருத்தியை நோக்கி நாம் செல்ல வேண்டுமானால் இந்த சபையின் காலத்தில் தவறு நடக்கக் கூடாது. இதனால் குறித்த கடையினை நகரசபை பொறுப்பெடுத்து பங்கிரங்க கேள்வி மனுக் கோரலில் விட வேண்டும் என கோரினார்.

அவ்வப்போது உறுப்பினர் காண்டீபனுக்கு ஆதரவாக உறுப்பினர்களான சேனாதிராஜா, பரதலிங்கம், இராஜலிங்கம், சந்திரகுலசிங்கம், சுமந்திரன் மற்றும் மதியழகன் ஆகியோர் கருத்து வெளியிட்டு இருந்தாலும் தனி ஒரு மனிதனாக சபையில் லரீப், அப்துல்பாரி மற்றும் பாயிஸ் ஆகிய உறுப்பினர்களுடன் உறுப்பினர் காண்டீபன் இது தொடர்பில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் போது குறித்த கடையை நகரசபை கையகப்படுத்தி பகிரங்க கேள்வி மனுவுக்கு விட வேண்டும் என நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் கடுமையாக குரல்கொடுத்ததுடன் தனி ஒருவர் நகரசபைக்கு சவால் விடுத்துள்ளார். அதற்கு நாம் இசைந்து கொடுக்க முடியாது.

மக்களுக்கு சேவை செய்யும் நாம் இவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்க ஆதரவாக கருணை காட்டிக் கொண்டிருக்க இது ஒன்றும் கருணை காட்டும் சபையல்ல என தெரிவித்தார்.

இதனை எதிர்த்த உறுப்பினர் பாயிஸ் வவுனியாவில் பல கடைகள் இவ்வாறு உள்ளதாகவும், ராணி மில் வரை உள்ள கடைகள் இவ்வாறு அமைக்கப்பட்டதாகவும் அவற்றினையும் பகிரங்க கேள்வி கோரலுக்கு விடுமாறு கோரினார்.

இதனையடுத்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இது தொடர்பில் கடும் தர்க்கம் ஏற்பட்டதுடன் இறுதியில் சபை 5 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு உறுப்பினர்களும் எதிர் எதிர் கட்சி உறுப்பினர்களுடன் காதிற்குள் சென்று மந்திர ஆலோசனை நடத்தினர். இறுதியில் குறித்த விவகாரம் பகிரங்க வாக்கெடுப்புக்கு வந்தது.

இதன்போது வவுனியா நகரசபையின் காணியில் நகரசபையின் கட்டளையை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை குறித்த நபருக்கே நீண்ட கால குத்தகைக்கு வழங்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக நகரசபை தலைவர் உட்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி (ஈபிஆர்எல்எப்), ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 12 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, குறித்த கடையினை நகரசபை பொறுப்பேற்று பகிரங்க கேள்வி கோரலுக்கு விட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் 9 பேர் வாக்களித்து இருந்தனர்.

இந் நிலையில் அதிக வாக்கினை பெற்றதன் அடிப்படையில் நகரசபை குறித்த கடையை கையகப்படுத்தி சட்டவிரோதமாக நகரசபையின் கடடளையையும் உதாசீனம் செய்து கட்டிடம் கட்டியவருக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்கான தீர்மானமாக அதனை எடுத்து உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சருக்கு மேலதிக முடிவுக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

-தமிழ்வின்-