உலகிலேயே திருட்டு நடக்காத அதிசய கிராமம்!!

318

ருமேனியா நாட்டில் உள்ள ‘எபின்தல்’ எனும் கிராமம், உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக திகழ்கிறது.

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ‘எபின்தல்’ எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300 பேர் வசிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு என காவல் நிலையம் இங்கு கிடையாது.

ஏனெனில், இங்கு குற்றங்களே பெரும்பாலும் நடைபெறுவதில்லை என்றும், திருட்டு என்றால் இங்குள்ளவர்களுக்கு என்னவென்றே தெரியாது என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கிராமம், உலகிலேயே திருட்டு நடைபெறாத கிராமமாக திகழ்வதாக தெரிய வந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும், பணமும் வைக்கப்படுகின்றன.

இந்த கிராமத்திற்கு ரொட்டி கொண்டு வருபவர், பையில் உள்ள குறிப்பைப் படித்து விட்டு, தேவையான ரொட்டிகளை வைத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொள்கிறார். மீதி பணத்தை அந்த பையிலேயே போட்டுவிடுகிறார்.

வீட்டின் உரிமையாளர் வீடு திரும்பும்போது ரொட்டிகளை எடுத்துக் கொள்வார். இது வழக்கமாக இந்த கிராமத்தில் நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, 75 வயது கிராமவாசி ஒருவர் கூறுகையில்,

‘1989ஆம் ஆண்டு எங்கள் கிராமத்தில் இருந்த ரொட்டிக்கடை மூடப்பட்டது. அதனால் நாங்கள் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் நகரத்துக்குச் சென்றுதான் ரொட்டி வாங்கிக் கொண்டிருந்தோம். 1996ஆம் ஆண்டு நகரிலிருந்து ரொட்டிகளை வரவழைக்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

அன்று முதல் பையில் பணத்தையும், குறிப்பையும் போட்டு வாசலில் வைத்துவிடுவோம். ரொட்டிக் கடைக்காரர் தேவையான ரொட்டிகளை வைத்துவிடுவார். கடந்த 22 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருக்கிறது. இதுவரை ரொட்டியோ, பணமோ திருடு போனதே இல்லை.

இங்கு வசிக்கும் மக்களிடத்தில் பொருளாதாரத்தில் வேறுபாடு இருந்தாலும், நற்பண்புகளில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். எல்லோரும் உழைக்கிறோம். அவரவர் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைப் பெறுகிறோம். நிம்மதியாக வாழ்கிறோம்.

அனுமதியின்றி இன்னொருவரது வீட்டிற்கோ, விளைநிலத்திற்கோ யாரும் செல்ல மாட்டார்கள். சொந்தம் இல்லாத ஒரு பொருள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், அதனை யாரும் எடுக்க மாட்டார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இங்குள்ள வாக்லாவ் மாசெக் எனும் பாதிரியார் கூறுகையில், ‘நான் இந்த கிராமத்துக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. கார் நிறுத்தும் இடத்தில் ஏராளமான பொருட்களை போட்டு வைத்திருக்கிறேன். கதவு இல்லை என்றாலும், இதுவரை எதுவும் திருடு போனதில்லை.

யாருக்காவது உதவி தேவைப்பட்டால் தாமாக முன் வந்து உதவும் மிக நாகரிகமான மக்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்களுடன் வசிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கிராமம் குறித்து ஊடகங்கள் அதிசயமாக செய்தி வெளியிடுவது குறித்து எந்த பெருமையும் இல்லை என்றும், பண்புடனும், பாதுகாப்புடனும் தாங்கள் வாழ்வதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.