ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன் : வேகமாக பரவும் வீடியோ!!

351


தமிழகத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி மாணவன் தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில், நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இயங்கி வரும் இந்த பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆசிரியர் இளங்கோவன் என்பவர் மாணவர்களுக்கு ஒத்திகை நடத்தியுள்ளார். அதன்படி, 8ஆம் வகுப்பு மாணவர் விஷால் கார்த்தி என்ற மாணவருக்கு ஒத்திகை நடத்த ஆசிரியர் இளங்கோவன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



அப்போது ஆசிரியருக்கு மாணவர் விஷால்கார்த்தி தலையில் மசாஜ் செய்துள்ளார். இதனை ரங்கராஜ் எனும் மற்றொரு ஆசிரியர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.



அதன் பின்னர், அந்த வீடியோவை அவர் இணையதளங்களில் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஆசிரியர்கள் இளங்கோவன் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறுகையில்,


‘மசாஜ் சம்பவம் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். மேலும் சில ஆசிரியர்கள் சரியாக பணி செய்யவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்மந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.